என் அனுபவங்கள்

June 27 2016

அலாரமே தேவைப்படாத நாட்கள்னா அவை ஞாயிற்றுக் கிழமைகள் தான்... எவ்ளோ ஷார்ப்பா கண்ணு தன்னாலே முழிச்சுக்குது!

வெல்வதற்கு மட்டுமல்ல, தோற்காமல் இருக்கவும் வாழ்க்கையில் ஓடித்தான் ஆகவேண்டியிருக்கின்றது.

இரவில் கடைசியாக மொபைல் வைக்கும் முன் கடைசியா எதும் வாட்சப்ல வந்திருக்கானு பார்க்கிறவங்க, அப்போதைக்கு மொபைலை கீழே வைத்ததாக சரித்திரம் இல்ல!

சன்னல் வழியே உலகைப் பார்ப்பதாக நினைத்திருக்கிறேன்! அதே சன்னல் வழியே உலகம் பார்ப்பதையறியாமலே!

அனுமதிக்கப்படும் அளவிற்கான தவறுகளும், குற்றங்களுமே ’நெளிவு சுளிவு’ என வகைப்படுத்தப் படுகிறது

யாரோ இடைவிடாது உங்களை உற்றுக் கவனிக்கிறார்கள் அந்த யாரோ நீங்களாகவும் இருக்கலாம்!

சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் நுழையும்போது கவனியுங்கள், அதுவரையிலும் அலங்கரித்திருந்த அகங்காரங்கள் ஒவ்வொன்றாய் உதிரத் தொடங்குவதை.

இந்த வாழ்க்கையை இன்னும் இலகுவாய் வாழ்ந்திட ’சூத்திரம்’ ஒன்றினைத் தேடிக்கொண்டிருப்பதிலேயே வாழ்க்கை கனக்க ஆரம்பித்து விடுகிறது.

"கோடை மழை" வராத கடன் வசூல் ஆகிறதுக்குச் சமம்!

வீழ்ச்சியிலும் பேரழகாய் இருக்கிறது "அருவி"

கோபத்தைக் கொட்டுவதற்கான வாய்ப்புகளை அமைதியாக அனுமதிப்பதுவும் பிரியம் தான்!

கேட்கிறவர்களுக்கு 'உண்மை பிடிக்காது' என்பதாலேயே சொல்கிறவர்கள் 'பொய்' சொல்கிறார்கள்!

மௌனித்திருக்கும் நேரமெல்லாம் மௌனமல்ல! உள்ளுக்குள் உரையாடிக் கொண்டிருக்கலாம்!

ஆன்ட்ராய்ட் போனிலிருக்கும் எல்லா 'ஆப்ஸ்'களும் சலிப்பூட்டும் கணத்தில், மூளைக்குள் நோக்கியா 1100 மொபைல் சிணுங்கிறது!

பிறக்கப்போகும் ஒரு குழந்தை சந்திக்கவிருக்கும் சவாலான உலகை விடவா, நானும் நீங்களும் வாழ்ந்துவரும் உலகம் சவாலாக இருந்துவிடப்போகிறது!? 

அழகான முகங்களைவிட அழகிய மனங்களே, காலம்காலமாய் அழியா ஓவியமாய் மனதிற்குள் பதிந்து கிடக்கின்றன.

நீண்ட நேரமாய் கதைத்துக் கொண்டிருக்கும் சிட்டுக்குருவியின் மொழியறிய எம் எந்த அறிவினைத் துறக்க வேண்டும்!

மொபைல் போனை அணைத்து வைத்துவிட்டு புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதுதான் வாசிப்பிற்குச் செய்யும் நேர்மை!
- பிரபு